Saturday, November 14, 2009

ஒரு லட்சியவாதியின் காதல் கதை- அத்யாயம்-3

வங்கக்கடலின் அழகை ரசித்தபடியே ஒவ்வொன்றாக சுண்டலை சுவைத்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா. நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. அவனது தேடலுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. மனதுக்குள் கோவம் நுழையும் போதெல்லாம் அவனது மகிழ்ச்சி அதை அறவே தடுத்து நிறுத்தியது. வாங்கிய சுண்டலும் தீர்ந்து போனது. மீண்டும் தன் சர்ட்டிபிகேட்டை (Certificate ஐ) மெல்ல புரட்ட துவங்கினான் கிருஷ்ணா. இளம் விஞ்ஞானி (Young Scientist) பாராட்டு பத்திரத்தை பார்த்த அக்கணமே தன் 15 வயது சம்பவங்கள் அவன் நினைவை வட்டமிட துவங்கியது.

நான் 10 ஆம் வகுப்பு படிக்கும்போது அப்பாவின் சுதாறிப்பும், அம்மாவின் சேமிப்பும் எங்கள் பொருளாதார நிலையை சற்று மேலே உயர்த்தியது. அது என் மேல்நிலை படிப்பிற்க்கு பேருதவியாய் இருந்தது. 10 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்ததாலும், அறிவியலில் 100 மதிப்பெண் பெற்றிருந்ததாலும், 11 ஆம் வகுப்பில் என்னால் எளிதில் அறிவியல் பாடத்தை தேர்வு செய்ய முடிந்தது. என் சிறுவயதிலிருந்தே அய்யா என்னை அறிவியல் கண்காட்சிக்கு அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். எங்கு கண்காட்சி நடந்தாலும் நாங்கள் அங்கு செல்வோம். ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பையும் அவர் என்னிடம் திறம்பட விளக்குவார். அதுமட்டுமின்றி என் கண்டுபிடிப்புகளையும் கண்காட்சியில் வைத்து அழகுபார்ப்பார்.

நான் 12 ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கும்போது பெங்களூர் மாநகரில் இந்திய அளவிலான ஒரு மாபெரும் அறிவியல் கண்காட்சிக்கு ஏற்ப்பாடு செய்யப்பட்டு இருந்தது. அக்கண்காட்சியில் என் அறிவியல் கண்டுபிடிப்பான சாட்டிளைட் ஆர்பிட் சிமுலேசனும் (SATELLITE ORBIT SIMULATION with various Velocities) வைக்கப்பட்டிருந்தது. இந்த கண்டுபிடிப்பிற்கு எனக்கு இளம் விஞ்ஞானி என்ற பட்டம் வழங்கப்பட்டது. 7 நாட்கள் நடந்த அந்த கண்காட்சியை பார்வையிட ISAC (ISRO Satellite Centre) ஐ சார்ந்த பல விஞ்ஞானிகள் வந்திருந்தனர். அவர்களில் பெரும்பானோர் தமிழர்கள். என் கண்டுபிடிப்பின் செயல்முறையை பார்த்து அவர்கள் வியந்து போனார்கள்.

"இதே ஆராய்ச்சியை எங்கள் ISAC ல் ஒரு தனி குழு செய்தது. இந்த ஆராய்ச்சி சாட்டிளைட்டை எப்படி விண்ணில் நிறுத்துவது என்று கணிக்க எங்களுக்கு உதவியது. இப்படிப்பட்ட சிறப்பான ஆராய்ச்சியை இந்த சிறுவயதில் செய்திருப்பது மிகவும் பாரட்டக்கூடியது. இவ்வளவு திறமை கொண்ட மாணவர்களை காண்பது அரிது. அவனது திறமையை சரியாக கண்டறிந்து அதை மேம்படுத்தி இருக்கிறிர்கள். இப்படிப்பட்ட இளைஞர்கள் தான் அறிவியல் உலகத்திற்கு தேவை." என்று மாணிக்கவாசகம் அய்யாவை பார்த்து பாராட்டினர் DR.சுவாமிநாதன் என்னும் விஞ்ஞானி. இவர் தமிழகத்தை சேர்ந்தவர். சுவாமி சார் என்னை பார்த்து "உன் கனவு என்ன?" என்று கேட்டார். என் கனவு தான் 5 வயதிலேயே முடிவானதாயிற்றே. சற்றும் சிந்திக்காமல் "உலகின் தலைசிறந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ராக்கெட் இன்ஜினியர் ஆகவேண்டும்" என்றேன் நாசாவை (NASA - National Aeronautics and Space Administration, USA) மனதில் வைத்துக்கொண்டு. அக்கணமே என்னை கட்டி தழுவினர். என் கண்கள் குளமானது. ஒரு மாபெரும் விண்வெளி விஞ்ஞானி என்னை கட்டி தழுவி உற்ச்சாகப்படுத்தியது இன்றும் என் நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகள். சுவாமி சார் "உனக்கு அறிவியல் சார்ந்த எந்த உதவியானாலும் என்னை கேள்." என்றார். "எனக்கு ரொம்ப நாளா ISRO வ பாக்கனும்னு ஆசை சார்" என்றேன். ஞாயிற்றிகிழமை அறிவியல் கண்காட்சி முடிய இருந்தது. ஏக்கம் கலந்த என் ஆசையை பார்வையிலேயே புரிந்துகொண்ட அவர் என்னை சனிக்கிழமை அழைத்து செல்வதாக கூறினார். உணவுடன் வரும் தாய்க்காக, பசியுடன் காத்திருக்கும் காக்கை குஞ்சுகளைப்போல சனிக்கிழமைக்காக நான் காத்துக்கொண்டிருந்தேன்.

சனிக்கிழமையும் வந்தது. மாணிக்கவாசகம் அய்யா என்னை அழைத்து செல்ல வந்தபோது என் அறை வாசலில் நான் அவருக்காக காத்துக் கொண்டிருந்தேன். அது அவர் எதிர்பார்ததுதான். ISRO வின் வாசலை அடைந்தவுடனே என்மனதின் பூரிப்பு அதிகரித்தது. மெய் சிலிர்த்தது. இலக்கு இல்லாத எந்த ஒரு சாதரண மனிதனால் நான் கொண்ட பரவசத்தை ஒருபோதும் உணர முடியாது. மகிழ்ச்சியின் வெள்ளத்தில் நான் மிதந்து கொண்டிருந்தேன். ISRO வினுள் பாதுகாப்பு கருதி பல இடங்களில் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருந்தபோதும் சில இடங்களை எங்களால் பார்வையிட முடிந்தது. சுவாமி சார் எனக்கு ஒரு பரிசு கொடுத்தார். அது அப்துல் கலாம் அவர்களது வாழ்க்கைப் பதிவான "அக்கினி சிறகுகள்" புத்தகம். என் வாழ்வின் மிகபெரிய உண்ணதமான பரிசு இது தான் என்று அந்த புத்தகத்தை படித்தபோது தான் உணர்ந்தேன். அந்த புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த வாசகம் "கனவு காணுங்கள். எதையுமே சின்னதாக நினைத்துப் பார்க்காதீர்கள். உங்கள் இலக்கை எப்போதும் மிகப்பிரமாண்டமானதாகவே வைத்திருங்கள். அப்போதுதான் அதை அடைய வேண்டும் என்ற வெறி உங்களை வாட்டிஎடுக்கும். அது தான் வெற்றிக்கு வழி" என்பது தான். கலாம் அய்யா கூறியது சத்தியம் தான். நானும் அப்படி ஒரு மாபெரும் கனவுக்கு சொந்தக்காரன் தான்.

"சந்தியா, கீழ விழுந்துராத மா...." என்ற குரல் கேட்டவுடன் நினைவுகளை உடைத்துக்கொண்டு சட்டென்று இன்றைக்கு திரும்பியது கிருஷ்ணாவின் மனம். தன் கைகடிகாரத்தை பார்த்து பெருமூச்சு விட்டான். மெல்ல குரல் கேட்ட திசையை நோக்கி பார்வையை திருப்பினான். ஒரு குழந்தை கையில் நூலை பிடித்துக்கொண்டு பின்னாலேயே நடந்து வந்து கொண்டிருந்தது. அதன் கவனம் முழுக்க மேலே பறந்து கொண்டிருக்கும் தன் பட்டத்தின் மீதே இருந்தது. 5 வயது இருக்கும் அந்த குழந்தை, மிக சாதுர்யமாக பட்டம் விட்டுக்கொண்டிருந்தது. தன் கையில் இருந்த பைல் ஐ (File) தான் கொண்டுவந்த பையில் வைத்துவிட்டு பின்னோக்கி வரும் அந்த குழந்தையை பிடிக்க சென்றான் கிருஷ்ணா. சற்று நிலை தடுமாறி கீழே விழப்போன அக்குழந்தையை ஓடிப்போய் தாங்கி பிடித்தான். தவறி கீழே விழும் நிலையிலும் அந்த பட்டத்தின் நூலை விடாது பிடித்திருந்தது அந்த குழந்தையின் பொன்விரல்கள். மெல்ல அந்த குழந்தையை தூக்கி முத்தமிட்டான்.

தன் இனிமையான குரலில் "தேங்க்ஸ் அங்கிள் (Thanks uncle). என்ன கீழ இறக்கி விடுங்க. நான் இன்னும் உயரமா பட்டத்த பறக்க விடனும்" என்று கூறி மெல்ல கிருஷ்ணாவின் கையில் இருந்து இறங்கியது.
"உன் பேர் என்ன மா??" என்றான் கிருஷ்ணா.
"சந்தியா அங்கிள்.." என்று கூறி, கிருஷ்ணாவை பார்த்து தன் அழகிய புன்னகையை தெளித்துவிட்டு, பட்டத்தை இழுத்துக்கொண்டு ஓடினால் அந்த சின்ன தேவதை சந்தியா. கிருஷ்ணா மீண்டும் மணலில் அமர்ந்தான். அவன் பார்வை முழுதும் சந்தியாவின் மேலேயே இருந்தபோதும் அவனது என்னமோ, அக்குழந்தை எப்படி பின்னோக்கி சென்றதோ அதைபோல பின்னோக்கி சென்றது.

"சந்தியா! என் சந்தியா!"
"என் சந்தியாவும் இந்த குட்டி சந்தியாவை போல தான், என்னை வானம் அளவுக்கு உயர்த்த நினைத்தவள்.

தொடரும் இந்த லட்சிய பயணத்தின் காதல் அத்யாயம்......


என்றும் அன்புடன்,
இராஜராஜன்

Sunday, November 8, 2009

ஒரு லட்சியவாதியின் காதல் கதை- அத்யாயம்-2

"அண்ணே! சுண்டல் வேணுமா???" என்ற குரல் கிருஷ்ணாவை இன்றைக்கு திரும்ப அழைத்தது. ஒரு சிறுவன் கையில் சுண்டல் பெட்டியுடன் நின்று கொண்டிருந்தான். பார்ப்பதற்கு மெலிதாக காணப்பட்ட அச்சிறுவனை பார்த்ததும் கிருஷ்ணாவிற்கு தன் சிறுவயது ஞாபகம் வந்தது. தான் பட்ட கஷ்ட்டங்கள் நினைவுக்கு வர துவங்கியபோதே அதை சற்றுநேரம் நிறுத்திவைத்துவிட்டு, "வேண்டாம் தம்பி!" என்று கூறி ஒருகணம் சிந்தித்து "படிக்கறியா தம்பி!" என்றான். உடனே அந்த சிறுவன் "ஆமாம் அண்ணே! 5 வது படிக்கறேன்! 4 மணிக்கு பள்ளிக்கூடம் முடிஞ்சுரும். உடனே இங்க வந்துருவேன். நைட் (night) 8.30 இல்ல 9 மணிவரைக்கும் இங்கதான் இருப்பேன்" என்ற சிறுவனை பார்த்து கிருஷ்ணா "நானும் உன்னமாரிதான்ப்பா. சின்ன வயசுல ரொம்ப கஷ்ட்டப்பட்டு தான் முன்னுக்குவந்தேன். நல்லா படி! அது தான் முக்கியம்" என்று கூறி அச்சிறுவன் முதுகில் ஒரு தட்டு தட்டி உற்சாகபடுத்தி, தன் சட்டைப்பையில் இருந்து 5 ரூ எடுத்து அந்த சிறுவனிடம் கொடுத்து "ஒரு சுண்டல் பொட்டலம் குடு" என்றான். புன்னகை வந்து அச்சிறுவனின் முகத்தை அலங்கரித்தது. ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்ற முத்தான வாக்கியத்தின் அர்த்தம் மீண்டும் ஒருமுறை புலப்பட்டது கிருஷ்ணாவிற்கு. மகிழ்ச்சியுடன் தன் கையில் இருந்த காகிதத்தை சுண்டல் வைக்க ஏதுவாக சுற்றினான் அச்சிறுவன்.

கிருஷ்ணாவிற்கு தன் 5 வயதில் நண்பர்கள் ராக்கெட் செய்ய பேப்பரை சுற்றிய காட்சி தன் கண்முன் வந்தது. "உன் பெயர் என்னப்பா?" என்ற கிருஷ்ணாவின் கேள்விக்கு காகிதத்தை சுற்றியபடியே "ரவி ண்ணா!" என்று கூறியபடி 2 கைக்கரண்டி சுண்டல் வைத்தான். அதை தன் கையில் வாங்கிக்கொண்டு கிருஷ்ணா "வாழ்க்கை எப்படி போகுது ரவி???" என்றான். "வருமானம் சரியில்ல! ரொம்ப கஷ்ட்டமா தான் இருக்கு." என்று கூறிய ரவியின் முகம் வாடிய மலர் போல மாறத்துவங்கியது. அதை சட்டென்று உணர்ந்த கிருஷ்ணா "ரவி! நாளைக்கு ஜெய்க்கணும்னா இன்னைக்கு கஷ்ட்டபட்டுதான் ஆகணும். இத எப்பவும் மனசுல வச்சுக்கோ. உனக்கு கஷ்ட்டம் தெரியது" என்று நம்பிக்கை கூறினான். "சரி ண்ணா! வரேன்." என்று திரும்ப நடக்க தொடங்கினான் ரவி. அவன் நடையில் ஒரு தன்னம்பிக்கை தெரிந்தது. அந்த தன்னம்பிக்கையை விதைத்தது கிருஷ்ணா. தான் தடுத்து வைத்திருந்த 10 வயது நினைவுகளுக்கு கிருஷ்ணா மீண்டும் உயர் கொடுத்தான்.

என் 10 வயதில், நானும் ரவியை போல தான், வீட்டின் வருமானம் மிகவும் குறைவு என்பதால் பள்ளி விட்டு வந்து ஒரு ஹோட்டல் கடைக்கு வேலைக்கு செல்வேன். பாத்திரம் கழுவிக்கொடுப்பது தான் என் வேலை. நான் அந்த வேலையில் சேர்ந்தது வருமானத்துக்காக மட்டும் அல்ல, இரவு உணவுக்காகவும் தான். கடை அடைக்கும்போது முதலாளி மீதம் உள்ள உணவை எடுத்துக்குகொள்ள சொல்வார். பட்டினியாய் கிடப்பதை விட வேலைசெய்து சாப்பிடுவதில் மகிழ்ச்சி தான் எனக்கும். இப்படி தான் காலம் போனது. சாதாரண நாட்களை ஓட்டுவதே பெரும்பாடாக இருந்த எங்களுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் என்பது ஒரு கனவாகவே இருந்தது. தீபாவளி பண்டிகை காலம் வந்தது. மாணிக்கவாசகம் அய்யா என்னை தன்மகனாகவே நினைத்தார். அதனால் பண்டிகைக்கு புது ஆடை எடுத்து தருவார். அந்த துணியை அணிவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். எங்கள் வீடு கூரை வீடுதான். எங்கள் ஒரே சொத்தும் அது தான். தீபாவளியின் பொது பட்டாசு வெடித்து தீ பிடிக்காமல் இருக்க கூரையின் மீது நாங்கள் நீரை ஊற்றிவிடுவோம். பக்கத்துக்கு வீட்டு சிறுவர்கள் ராக்கெட் விட்டு தீபாவளியை கொண்டாடுவார்கள். அதை பார்த்துக்கொண்டே இருப்பேன். பக்கத்துவீட்டு சிறுவர்கள் "ஏன் நீங்க ராக்கெட் வெடிக்கல?" என்று கேட்ப்பார்கள். ஒரு நொடி கூட தாமதிக்காமல் நான் கூறுவேன் "நான் ராக்கெட் வெடிக்கமாட்டேன்; இன்னும் கொஞ்சநாள்ல ராக்கெட் விடப்போறேன்" என்று. அச்சிறுவர்கள் அர்த்தம் புரியாமல் விளிப்பார்கள். உறுதியான எதிர்கால லட்சியத்தை நான் கொண்டிருந்ததால் என் ஏழ்மை என்னை பெரிது பாதிக்கவில்லை.

நான் 5 ஆம் வகுப்பு படிக்கும்போது, மாணிக்கவாசகம் அய்யா என்னை 7 ஆம் வகுப்பு மாணவர்களுடன் தான் அமரச்சொல்லுவார். அவர்களுக்கு பாடம் நடத்தும் பொது நானும் அங்கு இருப்பேன், அவர்களுக்கு தேர்வு நடக்கும் பொது நானும் தேர்வு எழுதுவேன். என் அறிவுத்திறனையும், ஆற்றலையும் பன்மடங்கு கூட்டினார் அய்யா. அவர் ஒரு அறிவியல் மேதை. அவருக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வமும் உண்டு, கற்றுகொடுக்கும் ஆர்வமும் உண்டு. அறிவியல் மட்டுமல்லாது எல்லா துறைகளிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு. ஒரு சிற்பி எப்படி ஒரு சிலையை வடிப்பானோ அதைப்போல என்னை பக்குவப்படுத்தினார்.
என் ஆர்வம் எப்போது அறிவியளின்மேலே தான் இருந்தது. வகுப்புகள் இல்லாத நேரம் என்னை நூலகத்தில் தான் காண முடியும். எங்கள் பள்ளி நூலகம் மிகவும் சிறியது. நூலகத்தில் என் கை படாத புத்தகங்களே இல்லை. அவைகள் என் தேடலுக்கு பேருதவியாய் இருந்தது. மாணிக்கவாசகம் அய்யா அவ்வப்போது சென்னைக்கு சென்று வருவார். அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த எந்த புது புத்தகமாயினும் அதை உடனே எனக்காக வாங்கிவருவார். அதை நான் உடனே படித்துவிடுவேன். படிப்பது மட்டுமின்றி அறிவியல் ஆராய்ச்சிகளை செய்தும் பார்பேன், அப்போது அய்யா உடனிருந்து உதவுவார். எங்கள் உறவு நாளுக்கு நாள் வலுப்பெற்றுக்கொண்டே போனது.

ஒரு நாள் செய்தித்தாளில் "செப்டம்பர் 20,1993" அன்று இந்தியா "ASLV-D3" செயற்க்கைகோளை செலுத்தவிருப்பதாக செய்தி படித்தேன். எங்கள் வீட்டில் தொலைகாட்சி பெட்டி இல்லை. நான் எப்போதும் என் நண்பன் பாலாஜி வீட்டில் தான் தொலைகாட்சி பார்ப்பேன். செப்டம்பர் 20, அன்று மாலை செய்திகள் காண பாலாஜி வீட்டிற்கு சென்றேன். நான் இதற்கு முன் ராக்கெட் செலுத்துவதை பார்த்ததில்லை. மிகுந்த ஆர்வத்துடன் செய்திகளுக்காக காத்திருந்தேன். செய்திகள் துவங்கின. என் ஆர்வம் அதிகமானது, மனசுக்குள் படபடப்பும் அதிகரித்து. என் கண்கள் தொலைகாட்சி பெட்டியை உற்று நோக்கின. "இன்று இந்தியா ஏவிய ASLV-D3 செயைக்கைகொள் எரிந்து கடலில் விழுந்தது. ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக, திசை மாறி தீ பற்றி எரிந்து நடுக்கடலில் விழுந்தது. இது குறித்து, கோளாறின் காரணத்தை கண்டறிய தனி குழுவினை நியமித்துள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்." என்ற செய்தியை வாசித்தார் செய்தி வாசிப்பாளார். அதிர்ந்து போனேன். அக்காட்சியையும் செய்திகளில் பார்த்தபோது என் கண்கள் கலங்கிபோனது. இனி ஒரு ராக்கெட் கூட தோற்க கூடாது. அதற்க்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கவும், புதிய சாதனைகளை படைக்கவும் நிச்சயம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சேரவேண்டும் என்று மீண்டும் ஒருமுறை எனக்குள் உறுதி செய்துகொண்டேன்.

தொடரும் இந்த லட்சிய பயணம்.......

என்றும் அன்புடன்,
இராஜராஜன்

Sunday, November 1, 2009

ஒரு லட்சியவாதியின் காதல் கதை- அத்யாயம்-1

தமிழகத்தின் தலைநகரமான சிங்காரச் சென்னையின் பெருமையாம் மெரினா கடற்கரையின் மணலை மெல்ல கையில் எடுத்து திரும்ப கடற்கரையில் தூவிக்கொண்டிருந்தான் கிருஷ்ணமூர்த்தி கருப்பசாமி. Dark blue pant , light blue shirt, shoe, tie, சீர செய்யப்பட்ட தலைமுடி என ஒரு மென்பொருள் பொறியாளன் போல தோற்றமளிக்கும் கிருஷ்ணாவின் முகத்தில் மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் புன்னகை. தன்னம்பிக்கை தெறிக்கும் அவனது கண்கள் யாரையோ தேடியவண்ணம் இருந்தது. எதிர்பார்ப்பும், படபடப்புடன் இனைந்து கொண்ட அவனது பார்வை நிமிடத்துக்கு பலமுறை கை கடிகாரத்தை பார்வையிட்டுக்கொண்டே இருந்தது. நொடிகள் செல்வது யுகம் போல உணர்ந்த கிருஷ்ணா, அருகில் இருந்த பையில் இருந்து ஒரு blue color file ஐ எடுத்து மெல்ல அதை புரட்ட துவங்கினான். அந்த file ல் அவனின் certificates தான் இருக்கும் என்று எவராலும் எளிதில் யூகிக்க முடியும். அவன் கை பக்கங்களை புரட்ட அவன் என்னமோ தான் கடந்துவந்த பாதையை புரட்ட ஆரம்பித்தது.

கரிசல்காட்டு கிராமத்து எளிழிளில் திரிந்த காலம்,
வயல் வரப்புகளில் வியர்வை வழிய உழைத்த காலம்,
மழை ஒழுகும் கூரையை மறைக்க முடியாமல் தவித்த காலம், கனவுகளை சுமந்துகொண்டு; கவலைகளை மறந்து கல்வியை மட்டும் தேடிய காலம்,
கால்நடையாய் பள்ளிக்கு சென்ற காலம்,
தெருவிளக்கின் வெளிச்சத்தில் படித்த காலம்,
தன்னம்பிக்கையுடன் லட்சியத்தை சேர்த்து விடியலுக்காக காத்திருந்த காலம்,
நூலகம் மட்டுமே உலகமென நினைத்திருந்த காலம்,
காகிதத்தில் rocket விட்டு விழையாடும் நண்பர்கள் மத்தியில்; rocket தொழில்நுட்பத்தில் புதுமையை புகுத்தி புரட்சி செய்ய துடித்த காலம்,.......

ஒரு சாதாரண கிராமத்தில் சாதாரண கூலி தொழிலாளியின் மகனாக பிறந்தபோதும், வறுமை பிடியின் மடியில் தவல்ந்தபோதும், ஏழை சமுதாய மக்களின் உழைப்பினால் வழியும் வியர்வைத்துளியின் உன்னதத்தை உணரும்போதும், என் கனவு என் கிராமத்தை பெருமைப்படுத்தும் என்ற நம்பிக்கை மனதில் ஒலிக்கும்போதும், வெற்றிபெற துடிக்கும் இதயம் பலம பெருக செய்தவர் மாணிக்கவாசகம் அய்யா. என் அறிவியல் ஆசரியர். "என்னால் சாதிக்க முடியாத சாதனையை நீ சாதிப்பாய்" என்று எனக்கு ஊக்கம் தந்த அவர்தான் என் உயரிய கனவுக்கு சொந்தக்காரர்.

என் 5 வயதில், காகித rocket எப்படி பறக்கிறது என்று அவரைப்பார்த்து கேட்ட நாள் இன்றும் என் மனதில் அப்படியே பசுமையாக இருக்கிறது. காகித rocket ஐ வியந்து பார்த்த என்னை rocket ஐ வடிவமைக்கும் வல்லுனராக மாற்ற அவர் பட்ட சிரமங்கள்தான் என்னென்ன.
ஏழ்மையின் உச்சத்தில் இருந்த என் குடும்பத்தின் ஒரே நம்பிக்கை நான் தான். எங்கள் வருமானம் இருவேளை உணவுக்கு கூட போதாதநிலை. கந்தல் ஆடை, இலவச பாட புத்தகம், மதிய சத்துணவு, ஏழுதி படிக்க slate, தெருவிளக்கு வெளிச்சம் என இப்படி தான் என் கல்வி ஆரம்பித்தது.

மாணிக்கவாசகம் அய்யா என்னையும் என் பொருளாதர நிலையையும் நன்கே அறிவார். அவர் என்னிடம் அடிக்கடி ஒன்றை கூறுவார். "நாளைக்கு ஜெய்க்கணும்னா இன்னைக்கு கஷ்ட்டபட்டுதான் ஆகணும்" .
இன்னைக்கும் என்னை உற்சாகபடுதுற வார்த்தை அவர் சொன்னது தான்.

பள்ளியில் சேர்ந்த சில நாட்களிலேயே என் அறிவியல் திறனை கண்டு அதை மேன்படுத்த ஆரம்பித்தார். என்னை rocket designer ஆக்க விரும்பினார். விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சேருவதை மட்டுமே லட்சியமாக வைக்க சொன்னார். என் லட்சியம் 5 வயதில் முடிவானது. இன்று 21 ஆண்டுகள் கழித்து அது நிறைவேற போகிற வேளையில் அய்யா என்னுடன் இல்லையே என்ற வேதனை ஒருபுறம் இருக்கத்தான் செய்கிறது.

"அண்ணே! சுண்டல் வேணுமா???" என்ற குரல் கிருஷ்ணாவை இன்றைக்கு திரும்ப அழைத்தது.

தொடரும்.......



என்றும் அன்புடன்,
இராஜராஜன்